சென்னை-கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு:சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
சென்னை:செங்குன்றம் அருகே மார்க்கெட் பகுதியில் காரை யார் ரிவர்ஸ் எடுப்பது என்பதில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் சுடப்பட்டார்.
சென்னை அருகே செங்குன்றம் முண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன். சந்தனக் கட்டைகள் கடத்துவதில் கில்லாடி. அது தொடர்பாக இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
இவரது தம்பி பாலனும் சந்தன கடத்தல் கடத்தலில் அண்ணனுக்கு உதவியாக இருந்து வருகிறார். மேலும் செம்மரக் கடத்தலிலும் இந்த அண்ணன் தம்பிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதியில் ரெளடித்தனமும் செய்து வந்தனர்.
இந் நிலையில் இன்று காலை பாலன் முண்டியம்மன் மார்க்கெட் பகுதிக்கு காரில் வந்தார். குறுகலான அந்த மார்க்கெட் சாலையில் எதிரே இன்னொரு காரில் தேவநேசன் என்பவரும் அவரது தம்பி செல்வராஜ் என்பவரும் வந்தனர்.
இருவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.செல்வராஜ் தான் காரை ஓட்டினார்.
எதிரே வந்த பாலனின் காரும் இவர்களது காரும் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு அந்த சாலை மிகக் குறுகலாக இருந்தது.
இதையடுத்து காரை பின்னால் எடு என பாலன் சொல்ல, உன் காரை பின்னால் எடு என செல்வராஜ் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாலன் மிக மோசமாகப் பேசவே, செல்வராஜ் காரை பின்னால் எடுக்க முயன்றார். ஆனாலும் அவரை போக விடாமல் பாலன் தகராறு செய்தார். இதையடுத்து தேவநேசன் தனது தம்பிக்கு ஆதரவாக பேச வந்தார்.
அப்போது தனது காருக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்த பாலன் வானை நோக்கி சுட்டார்.
மார்க்கெட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்த பொது மக்கள் சிதறி ஓடினர்.
இதையடுத்து செல்வராஜையும் தேவநேசனையும் நோக்கி இரண்டு ரவுண்டுகள் சுட்டார் பாலன்.
இதில் தேவநேசனின் தலையை உரசியபடி சென்ற குண்டால் அவர் மயங்கி விழுந்தார். செல்வராஜுக்கு தோள்பட்டையில் குண்டு உரசிச் சென்றது. அவர் வலியில் அலறினார்.
மக்கள் செய்தவறியாது திகைக்க தனது காரில் நிதானமாக ஏறி அமர்ந்து பின் ரிவர்ஸில் போய் அடுத்த சாலை வழியாக தப்பினார் பாலன்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவநேசனையும் செல்வராஜையும் பொது மக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் சென்னை வடக்கு இணை கமிஷ்னர் ரவி தலைமையில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர்.
பாலனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாலனிடம் உள்ள துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications