ரூ. 10 கோடி சம்பளம்: பாக். வீரருக்கு ஐசிஎல் வலை!
லாகூர்:பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்புக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ. 10 கோடி சம்பளம் தருவதாக இந்திய கிரிக்கெட் லீக் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜீ டிவியிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) படு வேகமாக பாப்புலராகி வருகிறது. உலக அளவில் பிரபலமான பல வீரர்கள் இதில் சேர்ந்து வருகின்றனர்.
இந்தியாவிலும் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். ஹைதராபாத்திலிருந்து 8 ரஞ்சி வீரர்கள் ஐசிஎல்லில் இணைந்துள்ளனர். இதேபோல தமிழகத்திலிருந்தும் 3 வீரர்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி தமிழக வீரர்களான ஹேமங் பதானி, சடகோபன் ரமேஷ் ஆகயோரையும் தங்களது லீக்கில் இணைக்க ஐசிஎல் முயன்று வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்பை இழுக்க பெரும் தொகையை சம்பளமாக கூறி ஆசிப்பை அணுகியுள்ளதாம் ஐசிஎல்.
3 வருட ஒப்பந்தத்தில் இணையுமாறு கோரியுள்ள ஐசிஎல் அதற்கு சம்பளமாக ரூ. 10 கோடியைப் பேசியுள்ளதாம். இந்திய கிரிக்கெட் லீக்கில் இணைவதா, இல்லையா என்பது குறித்து ஆசிப் தீவிரமாக பரிசீலித்து வருகிறாராம். தனது முடிவை அடுத்த வாரம் தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆசிப்பை கடந்த மாதமே ஐசிஎல் அணுகியது. அப்போது 3 ஆண்டுகளுக்கு ரூ. 9 கோடியை சம்பளமாக பேசியது. ஆனால் ஆசிப் அதை ஏற்கவில்லை. அதேபோல சோயிப் அக்தருக்கும் ரூ. 9 கோடிக்கு ஒப்பந்தம் பேசியது ஐசிஎல். அவரும் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்தியுள்ளது ஐசிஎல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பல வீரர்கள் ஐசிஎல்லில் இணைய ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரணம் ஐசில் அள்ளிக் கொடுக்கும் கவர்ச்சிகரமான தொகைதான்.
அப்துல் ரஸ்ஸாக், யூனிஸ் கான், இன்சமாம் உல் ஹக், சக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமது, ஷாகித் அப்ரிடி ஆகியோரை ஐசிஎல் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications