கேபிள் டிவி இணைப்பு: அரசு விளக்கம்
சென்னை:தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள அரசு கேபிள் டிவி கழகம், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு டிவி சிக்னல்களைப் பெற்று வழங்கும் பணியை மட்டுமே செய்யும் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
அரசு கேபிள் டிவி கழகம் குறித்து தமிழக அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தொலைக்காட்சிகளை நடத்துவோரிடமிருந்து சிக்னல்களைப் பெற்று மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும் பணியை (எம்.எஸ்.ஓ) மட்டும் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில்தான் ஆகஸ்ட் 13ம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் சட்டப்படி, எம்.எஸ்.ஓ. என்பது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற பகுதிகளில் கேபிள் ஆபரேட்டர்கள் என்றுதூன் கூறப்படுகிறது. எனவேதான் அதையொட்டியே தமிழக அரசின் அரசாணையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு அமைத்துள்ள அரசு கேபிள் டிவி கழகம், எம்.எஸ்.ஓ.வாக மட்டுமே செயல்படும். உள்ளூர் கேபிள் கட்டமைப்பு விநியோகத்தை அது மேற்கொள்ளாது. அதாவது, தொலைக்காட்சி நிறுவனங்களிலிருந்து சிக்னல்களைப் பெற்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு தரும் வேலையை மட்டுமே அரசு கேபிள் கழகம் மேற்கொள்ளும்.
ஏற்கனவே, முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக அளித்த விளக்கத்தில், வீடுகளுக்கு நேரடியாக கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியை அரசு கேபிள் டிவி கழகம் மேற்கொள்ளாது என்று விளக்கியுள்ளார். எனவே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி கழகம் குறித்து பயப்படத் தேவையில்லை, அவர்களின் தொழிலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications