கவிழ்வதைத் தடுக்க காங். தீவிரம்புதிய நிபுணர் குழு அமைப்பு
டெல்லி:இடதுசாரிகளின் கடும் எச்சரிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஆராயும்.
அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்தனர்.
ஆரம்பத்தில் இடதுசாரிகளின் எச்சரிக்கையை படு சாதாரணமாக எடுத்துக் கொண்டது காங்கிரஸ். வாபஸ் பெற்றால் கவலையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அலட்சியமாக பதிலளித்தார்.
இதனால் கடுப்பான இடதுசாரிகள், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர். ஒப்பந்தம் அமல்படுத்தப்படக் கூடாது. மீறினால் ஆதரவு நிச்சயம் வாபஸ் பெறப்படும், தேவையில்லாத பல விளைவுகள் ஏற்படும் என பிரதமரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்தார்.
இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியது. நேற்று முன்தினம் பிரதமர் இல்லத்தில் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் தலைவர்கள் கூடிப் பேசினர்.
பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசினார். நேற்று காலை மீண்டும் மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். இந்தப் பேச்சு குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறுகையில், இந்தப் பிரச்சினையில் எங்களது நிலை தெளிவாக, உறுதியாக உள்ளது.
இதனால் இந்த ஆட்சி கவிழ்ந்தால், அதுகுறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்றார்.
இடதுசாரிகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாததைத் தொடர்ந்து நேற்று மாலை காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் அவசரமாக கூடிப் பேசினர். இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள சந்தேகங்கள், கவலைகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து தெளிவுபடுத்த நிபுணர் குழு ஒன்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
7 பேர் கொண்ட இக்குழுவில், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிப் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர். அணு சக்தி ஒப்பந்தம் உருவாக முக்கியக் காரணமான முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஷியாம் சரணும் இதில் அங்கம் வகிப்பார்.
இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கே நீடிப்பார், அவரை மாற்றுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், டி.ஆர்.பாலு, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நிபுணர் குழுவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் இடைத் தேர்தல் வரும் நிலையைத் தடுத்து, இடதுசாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸைக் கேட்டுக் கொண்டன.
இதுதவிர வருகிற 27ம் தேதி அணு சக்தி ஒப்பந்தம் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் (இன்றைக்கு நடப்பதாக இருந்தது) என்றும், அன்றைய விவாதத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பதில் பிரணாப் முகர்ஜியை பதிலளிக்க வைக்கலாம் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications