இன்றும் தமிழக, கேரள எம்பிக்கள் மோதல்:முதல்வர்கள் கூட்டத்துக்கு லாலு அழைப்பு
டெல்லி:சேலம் ரயில்வே கோட்ட பிரச்சனை தொடர்பாக இன்றும் தமிழக-கேரள எம்பிக்களிடையே மக்களவையில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இது குறித்துப் பேச இரு மாநில முதல்வர்களுக்கும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார்.
கேள்வி நேரம் முடிந்தவுடன் இந்தப் பிரச்சனையை கேரள மார்க்ஸிஸ்ட் எம்பி கிருஷ்ணதாஸ் கிளப்பினார். பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து சேலம் ரயில்வே கோட்டத்தை உருவாகக்க் கூடாது என்றார். இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தண்ணீர்-ரயில்வேயின் பெயரால் நாட்டை துண்டாடும் வகையில் பேசாதீர்கள். நாம் எல்லாம் முதலில் இந்தியர்கள். இது என்ன கேரள சட்டசபையா அல்லது தமிழக சட்டசபையா. இது நாடாளுமன்றம். இங்கு இந்தியர் என்ற உணர்வோடு பேசுங்கள் என்றார்.
அப்போது பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியையும், கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் அழைத்துப் பேச பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அவரது யோசனைப்படி இரு மாநில முதல்வர்களும் எப்போது டெல்லிக்கு வர முடியும் என்று கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனால், இதுவரை கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை. இதனால் மீண்டும் இருவருக்கும் கடிதம் அனுப்புவேன் என்றார்.
சேலம் கோட்டத்தைத் துவங்க தேதி இறுதி செய்யப்பட்டுவிட்டதாக வரும் செய்திகள் தவறானவை. இது தொடர்பாக கெஜட் அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதையில் 623 கி.மீயும் திருச்சி மண்டத்தில் உள்ள 135 கி.மீ பாதையும் புதிதாக போடப்பட்டுள்ள 85 கிமீ நீள பாதையும் சேலம் கோட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
பிரிக்கப்பட்ட பின் பாலக்காடு கோட்டத்திடம் 509 கி.மீ. பாதை இருக்கும். மேலும் 36 கி.மீ. புதிய ரயில் பாதையும் சேர்க்கப்படும்.
தே போல கேரளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தென்-மேற்கு ரயில்வே மண்டலத்தை உருவாக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. அப்படிப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டிய அவசியமும் இப்போதைக்கு இல்லை என்றார் யாதவ்.












Click it and Unblock the Notifications