மன்னிப்பு கேட்டார் ரொனென் சென்!
டெல்லி:அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துப் போராடி வரும் கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவில்லை. அப்படி அந்தக் கட்சிகள் கருதினால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனென் சென் கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்றுக்கு ரொனென் சென் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் செய்ததற்காக இந்தியாவில் ஏன் சிலர் தலையறுபட்ட கோழிகள் போல துடிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இது இடதுசாரிகளையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரொனென் சென்னைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
சென் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அத்வானி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கோரினர். சென் மீது இடதுசாரிகளும் பாஜகவும் உரிமைப் பிரச்சனை கொண்டு வந்தன.
![]() |
லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் சென் பேச்சுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தார். சென் பேசியது உண்மையாக இருந்தால் அவர் மீது நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்.
இந் நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் சென். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
அணு ஒப்பந்தம் குறித்த எனது பேட்டியில் நான் அந்த அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசவில்லை. எனது பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய சில பத்திரிக்கை நண்பர்களையே நான் தலையறுந்த கோழிகள் என குறிப்பிட்டேன்.
எந்தவொரு மரியாதைக்குரிய எம்.பியையும் கட்சிகளையும் அவ்வாறு நான் குறிப்பிடவில்லை.
யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை. என்னுடைய கருத்து யாரையாவது புண்படுத்தியிருப்பதாக இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெளியிடுவற்கு அல்லாமல் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த எனது பேச்சுக்கள் பேட்டியாக வந்து விட்டன.
மேலும், எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. அல்லது தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ரொனென் சென்.
இதற்கிடையே ரொனேன் சென்னை இந்தியாவுக்கு வரவழைத்து அவரிடம் விளக்கம் கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க் கட்சிகள், இடதுசாரிகளின் கோரிக்கையை ஏற்க பிரதமர் தயாராக இல்லை என்று தெரிகிறது.
இதனால் இந்தப் பிரச்சனை அவ்வளவு சீக்கிரத்தில் ஓயப் போவதில்லை.













Click it and Unblock the Notifications