25ம் தேதி கேரள ரயில்களை மறிக்கும் பேராட்டம்:வீரபாண்டி ஆறுமுகம் அறிவிப்பு
திருச்சி:சேலம் ரயில்வே கோட்டத்தை கட்டாயம் அமைக்கக் கோரி வரும் 25ம் தேதி சேலம் ரயில் நிலையத்தில் கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் நடத்தப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட திமுக செயலாளருமான ஆறுமுகம் திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த கேரள ரயில்களை மறிக்கும் பேராட்டம் நடக்கவுள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி சேலம் கோட்டத்தைத் தொடங்க வேண்டும்.
இந்த கோட்டத்தைத் துவங்குவதற்கான பணிகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளன என்றார்.
முன்னதாக சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டு, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக அலுவலகம், சிக்னல் கண்ட்ரோல் ரூம், அதற்கென தனி அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்நிலையில் அது பற்றி எனக்கு தெரியாது என்று ரயில்வே அமைச்சர் லாலு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த பிரச்சனையில் 2 மாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் கூறியிருக்கிறார். இதெல்லாம் தேவையில்லாததாகும். மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சருக்கும், அந்தத் துறையைச் சேர்ந்த இணை அமைச்சருக்கும் (பாமகவைச் சேர்ந்த அமைச்சர் வேலு) கூட்டுப் பொறுப்புள்ளது.
அதனால் வரும் செப்டம்பர் 14ம் தேதி சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழா திட்டமிட்டபடி நடக்காவிட்டால் , முதல்வரிடம் முறைப்படி அனுமதி பெற்று திமுக மிகப் பெரிய போராட்டத்தில் இறங்கும் என்றார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications