ராமர் பாலத்தை அழிக்க சதி - வி.எச்.பி.
சென்னை: ராமேசுவரம் கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை சேது சமுத்திர திட்ட பணிக்காக தகர்க்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதா விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் மற்றும் ராமர் பால பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த குப்புராமு, கல்யாணராமன் ஆகியோர் கூறியதாவது,
ராமேசுவரம் கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலம் இந்துக்களின் புனித சின்னமாக கருதப்பட்டு வருகிறது. இதனை இடிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதையும் மீறி இதுவரை 20 சதவீதம் ராமர் பாலம் இடிக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை மணல்மேடு என்கிறார்கள். இப்போது அதை வெடிவைத்து தகர்க்க போகிறார்கள். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து சுற்றுப்புறசூழல் கடுமையாக பாதிக்கப்படும்.
மத்திய அரசு இந்துக்களின் புனித மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். தென் தமிழகத்தில் மணவாளக்குறிச்சி கடல் பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் தோரியம் உள்ளது. அதை வைத்து இப்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை போன்று 4 மடங்கு மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யலாம். எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து 400 வருடங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.
ராமர் பாலத்தை இடிப்பதன் மூலம் இந்த பகுதியில் இருக்கும் தோரியம் நீரில் கரைந்துவிடும். இதனால் அணுமின் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும் என்று பயந்த அமெரிக்கா, ராமர் பாலத்தை இடிக்க மறைமுகமாக நாசா விண்வெளி மையத்தை வைத்து பொய்யான தகவலை சொல்லியுள்ளது.
சேது கால்வாய் அமைக்க எளிய மாற்று வழிகள் இருக்க அரசு பிடிவாதமாக இருப்பதன் மர்மம் புரியவில்லை. மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்று அவர் கூறினார்கள்












Click it and Unblock the Notifications