நெல்லை, தூத்துக்குடி ஆய்வுப் பணி: திமுக,அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு
திருநெல்வேலி:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு நடத்திய ஆய்வு நிகழ்ச்சியை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் முல்லைவேந்தன் தலைமையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
பல்வேறு பணிகளை பார்வையிட்ட இக்குழுவினர் விவசாயத்துக்குரிய கருவிகளையும் தொடங்கி வைத்தனர். மேலும் மாணவ, மாணவிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர். அரசு விடுதிகளையும் பார்வையிட்டனர்.
பின்னர் நெல்லை கொக்கிரகுளத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வாளக கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுப் பணியை இக்குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஜெயராமன் (வந்தவாசி), அசன் அலி (ராமநாதபுரம்) ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிற உறுப்பினர்களான சையது கவுஸ் பாட்ஷா (திமுக), வீர இளவரசு (மதிமுக), அரி (அதிமுக), கோவிந்தசாமி (சிபிஎம்), சிவபுண்ணியம் (சிபிஐ), கோவை தங்கம் (காங்.), சண்முகவேலு (அதிமுக,) செந்தமிழ் செல்வன் (அதிமுக), சுப்புராம் (காங்.), மகேந்திரன்( சிபிஎம்) மற்றும் ஆஸ்கார் சி.நிக்லி, தங்கமணி, பன்னீர் செல்வம் ஆகிய 13 சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பான்மையான உறுப்பினனர்கள் மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுப் பணியை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.