சிறை வாசலில் சஞ்சய் தத்துடன் கை குலுக்கியபோலீஸ்காரர் சஸ்பெண்ட் - 8 பேரிடம் விசாரணை
புனே:எரவாடா சிறையிலிருந்து நடிகர் சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தபோது அவருக்கு கை குலுக்கியும், கட்டிப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்த 9 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், புனே அருகில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை சிறையிலிருந்து விடுதலை ஆனார் சஞ்சய் தத்.
சிறையிலிருந்து சஞ்சய் தத் வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த போலீஸார், சஞ்சய் தத்தின் ரசிகர்களாக மாறி விட்டனர். அனைவரும் போட்டி போட்டு அவருடன் கை குலுக்குவதும், கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்வதுமாக இருந்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருடன் போலீஸாரே கை குலுக்கி பேசுவது சரியா என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக 9 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி 9 போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்ற 8 பேர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீலின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications