55 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை:சென்னை மருத்துவமனையில் சாதனை
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை மருத்துவமனையில் 55 வயதுப் பெண்ணுக்கு செயற்கைக் கருத்தரிப்பு மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
![]() |
கர்நாடக மாநிலம் பத்ராவதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (57). இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயர் அதிகாரியாக இருந்தார். இவருக்கு பிருந்தா என்ற மனைவி இருக்கிறார் (55). இருவருக்கும் 1979ல் திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
திருமணமாகி 27 வருடங்களாகியும் குழந்தை உண்டாகவில்லை. இதனால் இருவரும் பெரும் கவலையுடன் இருந்தனர். இந்நிலையில் சென்னை ஆகாஷ் மருத்துவமனையில் இக்சி என்ற செயற்கை முறை கருத்தரிப்பு குறித்து அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவமனையை இருவரும் அணுகினர். அவர்களுக்கு டாக்டர்கள் காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ் ஆகியோர் பல்வேறு சோதனைகளை நடத்தினர். பின்னர் சிகிச்சை ஆரம்பித்தது.
பிருந்தாவின் நிறத்தையொட்ட 29 வயதுப் பெண் ஒருவரிடமிருந்து கரு முட்டைகள் தானமாக பெறப்பட்டு, அதில் அழகப்பனின் உயிரணுக்கள் இணைக்கப்பட்டன. பின்னர் இது பிருந்தாவின் கருப்பையில் நவீன முறையில் செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் இது நடந்தது.
அதன் பின்னர் 17 நாட்கள் கழித்து ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. பிறகு ஸ்கேன் சோதனையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் பிருந்தா கர்ப்பம் தரித்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் பிருந்தாவின் உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அவருக்கு இருந்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று காலை 6 மணிக்கு பிருந்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைள் பிறந்தன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.
ஒரு குழந்தை இரண்டே கால் கிலோ எடையிலும், இன்னொரு குழந்தை 2.28 கிலோ எடையிலும் உள்ளன. இரண்டுமே ஆரோக்கியமாக உள்ளன. பிருந்தவும் நலமுடன் உள்ளதாக டாக்டர் ஜெயராணி காமராஜ் தெரிவித்தார்.
இத்தனை கால தவத்திற்குப் பலனாக இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்திருப்பது பிருந்தாவையும், அழகப்பனையும் பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்ப்பம் தரித்தவுடனேயே தனது வங்கி வேலையை விட்டு விட்டார் பிருந்தார். விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்ட அவர் தனது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளப் போகிறாராம்.
ஆகாஷ் மருத்துவமனைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல் குழந்தைக்கு ஆகாஷ் என்றும், 2வது குழந்தைக்கு ரிஷிகேஷ் என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அழகப்பன் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 59 வயது பெண் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. தற்போது பிருந்தா இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதேசமயம், செயற்கைக் கருத்தரிப்பு முறையில் வயதான பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
இக்சி முறையில் எந்த வயதினருக்கும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை இந்த 55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.













Click it and Unblock the Notifications