சென்னை விமான நிலையத்தில் ஏ.எஸ்.பி.க்குசரமாரி கத்தி குத்து-சஸ்பெண்ட் காவலர் வெறி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த (சிஐஎஸ்எப்) உதவி எஸ்.பி. ஒருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நாளை முதல் முறையாக சென்னைக்கு வருகிறார் பிரதீபா பாட்டீல். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் ஏற்கனவே பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதீபா பாட்டீல் வருகையால் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், விமான நிலைய வளாகத்தில் இந்த கத்தி குத்து நடந்துள்ளது.
விமான நிலைய ஓய்வறையில் உதவி எஸ்.பி. விஜயக்குமார் (48) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் ஆறுமுகம் (42) என்பவர் விஜயக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
விஜயக்குமாரின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அருகே இருந்த காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆறுமுகம் தப்பி ஓடி விட்டார். பின்னர் விஜயக்குமாரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதீபா பாட்டீல் வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியையும் எழுப்பியுள்ளது.
சரியாக பணிக்கு வராததால் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு விஜயகுமார் தான் முக்கிய காரணம் என்று கருதி இத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications