சவால் விட்டது யாருக்கு?: கருணாநிதி
சென்னை:தோழமை கொண்டோருக்கு யாரும் சவால் விட மாட்டார்கள். துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை
கேள்வி: தங்களின் மைத்துனர் வீட்டுத் திருமணத்தில் தாங்கள் பேசும்போது, கழக ஆட்சிக்கு அறைகூவல் விடுக்கும்போதெல்லாம் உறுதியான வீர உள்ளம் படைத்த கழகத்தினர் இருக்க பயமேன் என்று நீங்கள் குறிப்பிட்டதை திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு விடுத்த மிரட்டல் என்பது போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
பதில்: தோழமை கொண்டோருக்கு யாரும் சவால் அல்லது மிரட்டல் விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக அணியை உடைக்க வேண்டுமென பகீரத முயற்சி செய்து வருகிற சில ஏடுகள், திருமணத்தில் நான் பொதுவாகப் பேசியதை, கழகத்தின் உறுதியை எடுத்துக் கூறியதை, திரித்து வெளியிட்டு கலகம் செய்ய துடியாய்த் துடிக்கின்றனவே அது தான்.
இத்தகைய எத்தர்களின் விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்து விடமாட்டார்கள்.
கே: கூட்டணிக்கும் தொகுதி உடன்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
பதில்: அந்தந்த கட்சிகளின் சந்தர்ப்பம், வசதி, வாய்ப்புக்கு ஏற்ப வியாக்யானம் செய்து கொண்டாலும், பொதுவாகத் தொகுதி உடன்பாட்டையே நமது மக்கள், கூட்டணி என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
அவ்வப்போது அணி நிலவரம் மாறுபடுவதால், தமிழ்நாட்டில் தொகுதி உடன்பாடு எனினும் நமது அணியை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்றே அழைக்கிறோம். தேர்தல்கள் வரும்போது அந்தந்த கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகளைக் கணக்கிட்டு-தொகுதி உடன் பாடு செய்து கொள்கிறோம். பாமக சார்புடைய ஒரு பத்திரிகை கூட்டணி இல்லை என்று கொட்டை எழுத்தில் தலைப்பை பிரசுரித்து விட்ட காரணத்தால் தேர்தல் உடன் பாடே இல்லை என்று பொருள் அல்ல.
கே: நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் பேசும் போது, மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று கருத்து தெரிவித்திருக்கிறார்களே?
ப: அப்போது தானே தப்பித் தவறி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் மாதக் கணக்கில் பொடா சட்டத்தின் கீழே உள்ளே வைத்து மகிழ்ச்சியடைய முடியும். அன்று ஓங்கி ஒலித்த சூன்யக்காரி, சூழ்ச்சிக்காரி என்ற சொற்கள் இப்போதும் காதில் ஒலிக்கிறதல்லவா!
கே: நம்மை அலட்சியப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதே?
ப: மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும் என்ற பழமொழி எதற்காக வந்தது.
நம்மை அலட்சியப் படுத்துகிறவர்களுடன் மதிக்காதவர்களுடன்- தோழமை எப்படிக் கொள்ள முடியும் என்பதைத்தான் கழகப் பொருளாளர் அப்படி சொல்லியிருக்கிறார். கழகப் பொருளாளர் ஏதோ ஒரு விரக்தியில் வெளியிட்ட தனிப்பட்ட கருத்து அது. கழகத்தின் செயற்குழு, பொதுக் குழு கூடி எடுத்த முடிவல்ல.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications