கோயம்பேடு பஸ் நிலையத்தைப் பிரிக்க திட்டம்?
சென்னை:கோயம்பேடு ஒருங்கிணைந்த மையப் பேருந்து நிலையத்தைப் பிரித்து, நகரின் பல்வேறு பகுதிகளில் வெளியூர்ப் பேருந்து நிலையங்களை நிறுவ காவல்துறை யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.
இது அமலுக்கு வந்த பின்னர் நகரின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்ட வெளியூர்ப் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டன. திருவள்ளுவர் விரைவுப் பேருந்துகளும் கோயம்பேட்டுக்கே மாற்றப்பட்டன.
இந்த மாற்றம் ஆரம்பத்தில் சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால் நாளடைவில் இது பிசுபிசுக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கோயம்பேடு வரை வந்து போய்க் கொண்டிருந்த ஆம்னி பேருந்துகள் நீதிமன்றத்தை அணுகி தடையுத்தரவு பெற்று நகருக்குள் வந்து போக ஆரம்பித்தன.
மேலும் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகவே தற்போது கோயம்பேட்டிலிருந்து வரும் பேருந்துகள் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையவே இல்லை.
இந்த நிலையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது காவல்துறை.
அதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு பஸ் நிலையத்தை 3ஆக பிரித்து தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூரில் வெளியூர் பேருந்து நிலையங்களை அமைக்கலாம் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில்குமார் சமீபத்தில் நடந்த சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும கூட்டத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ள சென்னை நகருக்கான 2வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்த கருத்தரங்கத்தில்தான் இந்த யோசனையை அவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டதால் கோயம்பேட்டில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. இதனால் சென்னை நகரின் முக்கிய வீதியான அண்ணாசாலையில் வெளியூர் பஸ்கள் வருவது தவிர்க்கப்பட்டது.
ஆனால் கோயம்பேடு செல்லும் பாதையான கிண்டி முதல் வடபழனி 100 அடிரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காண கோயம்பேடு பஸ் நிலையத்தை கண்டிப்பாக புதிய இடத்துக்கு மாற்ற வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் ஆகியவற்றுக்கான பஸ் நிலையத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்.
பூந்தமல்லி வழியாக செல்லும் பஸ்களுக்கு பூந்தமல்லியிலும், தாம்பரம் வழியாக செல்லும் பஸ்களுக்கு தாம்பரத்திலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்களுக்கு திருவான்மியூரிலும் தனித்தனியாக பேருந்து நிலையங்கள் அமைக்கலாம்.
சென்னையில் வாகனங் களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாதது, போக்கு வரத்து நெரிசலுக்கும் சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
அதிக அளவில் கடைகள் இருக்கும் மார்க்கெட் பகுதிகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க வேண்டும். இந்த யோசனைகளை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றினால் சென்னை நகரின் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காணலாம் என்று கூறியிருந்தார்.
முன்பு மதுரையிலும் இதுபோன்ற பிரச்சினை நிலவியது. இதையடுத்து மதுரை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து வெளியூர்ப் பேருந்துகளையும் பிரித்து ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி என பிரித்து புதிய பேருந்து நிலையங்களை உருவாக்கினர். இதையடுத்து அங்கு போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
பரிதி இளம்வழுதி:
சுனில்குமாரின் யோசனை குறித்து அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவருமான பரிதி இளம்வழுதி கூறுகையில்,
கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பிரித்து புதிய பேருந்து நிலையங்களை உருவாக்கினால் நிச்சயம் நெருக்கடி குறையும்தான். போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஏதாவது செய்தாக வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications