விளம்பரங்களற்ற மாநகரங்கள் - கருணாநிதி அறிவிப்பு
சென்னை:தமிழகத்தின் ஆறு மாநகராட்சிகளிலும் விளம்பர போர்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆறு நகரங்களும் விளம்பரங்களற்ற நகரங்களாக மாற்றப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் விளம்பரப் பலகைகளை அகற்றுவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் தலைமைச் செயலாளர் திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா, மாநகராட்சி ஆணையர் லக்கானி, மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ளதைப் போல தமிழகத்தின் மாநகரங்களையும் விளம்பரப் பலகைகள் இல்லாத நகரங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும் விளம்பரப் பலகைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இங்கு விளம்பரப் பலகைகளை வைத்துள்ள தனியார்கள் தாங்களாகவே அவற்றை அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அரசே அவற்றை அகற்றும்.
சிலர் விளம்பரப் பலகைகளை அகற்றுவற்கு நீதிமன்றத் தடையை வாங்கி வைத்துள்ளனர். அந்தத் தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல, அரசியல் கட்சியினர், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில் வைக்கபப்டும் விளம்பரப் பலகைகள் அந்த நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்களுக்கு முன்பும், நிகழ்ச்சி முடிந்த 2 நாட்கள் வரை மட்டுமே நீடிக்க அனுமதிக்கப்படும். அதன் பின்னர் அவற்றை அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அரசே அவற்றை நீக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications