மூணாறு தேனிலவு கொலை வழக்கு:வித்யா, காதலன் குற்றவாளி-கோர்ட் தீர்ப்பு!
தொடுபுழா (கேரளா)மூணாறு தேனிலவுக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வித்யா என்கிற வித்யலட்சுமி, ஆட்டோ டிரைவர் ஆனந்த், அவரது கூட்டாளி அன்புராஜ் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை பம்மலைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனந்தராமனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பின்னர் இருவரும் 16ம் தேதி தேனிலவுக்காக மூணாறு சென்றனர்.
தேனிலவுப் பயணத்தில் அனந்தராமனும், வித்யாவும் மூழ்கியிருந்த நேரத்தில் 18ம் தேதி குண்டலா என்ற இடத்தில் வைத்து அனந்தராமன் படுகொலை செய்யப்பட்டார்.
![]() |
சிலர் வந்து தனது கணவரைத் தாக்கி கொலை செய்து விட்டு எனது நகைகளைப் பறித்துக் கொண்டு சென்றதாக வித்யா கூறினார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் கூறியது பொய் என்று தெரிய வந்தது.
கொலையாளிகளை ஏவி விட்டுக் கணவரைக் கொலை செய்ததே வித்யாதான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்த வித்யா கைது செய்யப்பட்டார். அவர் ஏவி விட்ட ஆட்டோ டிரைவர் ஆனந்த், அவரது நண்பர் அன்புராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில், வித்யாவும், ஆனந்த்தும் நெடு நாட்களாக காதலித்து வந்ததும், ஆனால் இதை எதிர்த்த வித்யாவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அனந்தராமனை வித்யாவுக்கு கட்டி வைத்து விட்டனர் என்பது தெரிய வந்தது.
போலீஸாரிடம் வித்யா கொடுத்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வித்யா கொடுத்த வாக்குமூலத்தில், ஆனந்தை நான் காதலித்ததை எனது வீட்டினர் விரும்பவில்லை.
என்னை கட்டாயப்படுத்தி அனந்தராமனுக்கு திருமணம் செய்து வைத்தனர். என்னால் ஆனந்த்தை மறக்க இயலவில்லை. எனவே கணவரை தேன் நிலவுக்கு அழைத்து சென்று தீர்த்து கட்டி விட திட்டம் தீட்டினேன். அதன்படி நானும் அனந்தராமனும் மூணாறு சென்றோம்.
மூணாறில் எங்கு தங்கி இருப்போம். எங்கெங்கு போவோம் என்று என் காதலன் ஆனந்திடம் ஏற்கனவே போனில் தகவல் தெரிவித்து இருந்தேன். அதன்படி ஆனந்த் தன் நண்பர் அன்புராஜூடன் வந்து நாங்கள் தங்கி இருந்த லாட்ஜ் அருகில் மற்றொரு லாட்ஜில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று குண்டலா ஏரிக்கு நானும் அனந்தராமனும் படகு சவாரி செய்ய சென்றோம். இதை நான் எஸ்.எம்.எஸ். மூலம் ஆனந்துக்கு தெரிவித்தேன்.
அங்கு சிறுநீர் கழிக்கச் சென்ற என் கணவரை ஆனந்தும் அவர் நண்பர் அன்புராஜூம் சேர்த்து அடித்துக் கொன்றனர். என் கணவரை யாரோ கொன்று விட்டு நகைகளை திருடி சென்று விட்டனர் என்று நாடகம் ஆடினேன்.
காதலருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி விட்டது என்று கூறியிருந்தார் வித்யா.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வித்யா, அன்புராஜ், ஆனந்த் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது தொடுபுழா நீதிம்ன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீனே வழங்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை தொடங்கியது. இன்று சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தொடுபுழா நீதிமன்றத்தில் வித்யாலட்சுமி, ஆனந்த், அன்புராஜ் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி அவர்கள் மூவரிடமும், உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார். பின்னர் தண்டனை விவரம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மற்ற இருவரையும் விட வித்யாவுக்கே கடும் தண்டனை கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் மூன்று பேருக்கும் என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications