மூப்பனார் இருந்திருந்தால்..விஜயகாந்த் உருக்கம்
சென்னை:மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மட்டும் இருந்திருந்தால் என்னுடைய அரசியலே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மூப்பனாரின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சரும், மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன் உட்பட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
என்னால் மறக்கவே முடியாத தலைவர் மூப்பனார். அவர் எனக்கு பல நேரங்களில் பல யோசனைகளை கூறி வழி நடத்தியிருக்கிறார். தம்பி (விஜய்காந்த்) இப்போ சினிமாவில் இருக்கட்டும், தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்.
அவரது குடும்பத்தில் ஒருவனாகவே நான் இருந்தேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் தவறாமல் நான் மூப்பனாருக்கு வாழ்த்துச் சொல்வேன்.
இன்னும் அவர் உயிரோடு இருப்பது போலத்தான் உணர்கிறேன். மரியாதை, நல்ல பண்புகளை நான் மூப்பனாரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். அடிக்கடி அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாசல்படி வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவரது பண்பை இன்று ஜி.கே.வாசனும் பின்பற்றி வருகிறார்.
மூப்பனார் மட்டும் இப்போது இருந்திருந்தால் என் அரசியலே வேறு மாதிரி இருந்திருக்கும். எளிமைக்கு மூப்பனார்தான் எடுத்துக்காட்டாக இருந்தார். மூப்பனார் காமராஜரை பின்பற்றினார். நான் அவரை பின்பற்றிதான் கதராடை அணிகிறேன் என்றார் விஜயகாந்த் உணர்ச்சிவசப்பட்டவராய்.












Click it and Unblock the Notifications