டெல்லியில் ரூ. 20 கோடியில் ஏழுமலையான் கோவில்
திருமலை:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தலைநகர் டெல்லியில் ரூ. 20 கோடி மதிப்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ளது.
இந்தியாவிலேயே வருமானம் அதிகம் மிக்க கோவிலாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல கோவிலின் வருமானமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும், புதிய வசதிகளை ஏற்படுத்தவும் கோவில் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து விவாதிக்க திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சல ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், திருப்பதி தேவஸ்தானம் ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. இங்கு வந்து ரத்ததானம் செய்வோருக்கு ஒரு லட்டு பரிசாக அளிக்கப்படும். மேலும், விஐபி தரிசன டிக்கெட்டும் இலவசமாக தரப்படும்.
கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் நுழைவாயில்கள் கட்டப்படவுள்ளன. ரூ. 40 லட்சம் செலவில் இவை அமைக்கப்படும்.
இதுதவிர திருமலையில் அகண்ட நாம சங்கீர்த்தனி மண்டபத்தை ரூ. 1.48 கோடி மதிப்பில் கட்டத் திட்டமிட்டுள்ளோம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுப்பத் தீர்மானித்துள்ளோம்.
டெல்லியில் ரூ. 20 கோடியில் இக்கோவில் எழுப்பப்படும். இங்கு ஒரு தியான மண்டபமும் அமையும். இந்தக் கோவில் டெல்லி உத்வான்மார்க் பகுதியில், தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும்.
இதேபோல சிக்கிம் தலைநகர் காங்டாக்கிலும் தியான மண்டபத்துடன் கூடிய கோவில் கட்டப்படும். அம்மாநில அரசிடமிருந்து நிலத்தை தானமாகப் பெற்று இக்கோவில் கட்டப்படும் என்றார் அவர்.