குப்பைகளை விரைந்து அள்ள கருணாநிதி உத்தரவு
சென்னை:சென்னை நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு முதல்வர் கருணாநிதி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் இது நாள் வரை குப்பைகளை அகற்றி வந்த ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததால், அந்த நிறுவனம் தனது பணியை நிறுத்தி விட்டது. அதற்குப் பதிலாக நீல் மெட்டல் என்ற புதிய நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டது.
ஆனால் போதுமான குப்பை அள்ளும் வண்டி, குப்பைத் தொட்டிகள் இல்லாமல் குப்பைகளை அள்ள களம் அறங்கிய நீல் மெட்டல் நிறுவனத்தால் குப்பைகளை அள்ள முடியாமல் திணறி நிற்கிறது.இதனால் சிங்காரச் சென்னை நகர் முழுவதும் குப்பைகள் மலை போல தேங்கிக் கிடக்கின்றன. நகர நாறிப் போயுள்ளது. இதில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நகர மக்கள் நிலை படு மோசமாக உள்ளது.
இந்த விவாகரம் நேற்றைய மாநகராட்சிக் கூட்டத்திலும் வெடித்தது. இதனால் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் நீல் மெட்டல் குழப்பம் குறித்து முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குச் சென்றது.
இதையடுத்து மேயர் மா.சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் லக்காணி உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளும் பணியில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டிருந்த நிறுவனத்துக்குப் பதிலாக புதிய நிறுவனத்துக்கு அந்தப் பணி ஒப்படைக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக சென்னை நகரில் குப்பைகளை அள்ளும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடந்தன. இதுபற்றிய செய்தியினை ஏடுகளில் கண்ட முதல்வர் கடலூரிலிருந்து சென்னை திரும்பியவுடன், மாநகராட்சி மேயர், ஆணையர், காவல்துறை ஆணையர், ஆகியோரிடம் பேசி உடனடியாக சென்னை மாநகரில் சுத்தம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறு கட்டளையிட்டார்.
முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று காலை முதல் மாநகரின் அனைத்து வட்டங்களிலும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு சென்னை நகரில் இனி குப்பைகள் முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications