கோவையில் ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்!
கோவை:குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ. 20 ஆக உயர்த்தக் கோரி கோவையில் நேற்று கண்ணன் என்ற ஆட்டோ டிரைவர் தீக்குளித்தார். இன்று ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் கோவையில் பதட்டம் நிலவுகிறது.
சமீபத்தில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 14ஐ நிர்ணயித்து அரசு உத்தரவிட்டது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் இதுதொடர்பான அரசு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் பொருத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். முதல் 2 கிலோ மீட்டருக்கு 14 ரூபாயும், அதற்கு அடுத்து தலா ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆரம்ப கட்டணத்தை ரூ.20 ஆகவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 என்றும் கட்டணம் திருத்தி நிர்ணயிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும், ஆட்டோ சங்க மாவட்ட தலைவருமான கண்ணன் என்பவர் திடீரென தீக்குளித்துப் போராட்டத்தில் குதித்தார்.
அவரைத் தடுத்து மீட்ட போலீஸார் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கண்ணனின் வயிறு, மார்பு, மூக்கு உள்பட உடலின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு வந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. கண்ணனுக்கு சாந்தி (32) என்ற மனைவியும் தினேஷ் (12), ஜெயராம் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கண்ணன் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுநமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கண்ணனை, அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சரை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில், கட்டண நிர்ணயம் பற்றி போக்குவரத்து அமைச்சர் நேரு கோவையில் பேச்சுவார்த்தை நடத்துவார், கோரிக்கை தொடர்பாக தீர்வு காணப்படும் என்றார். ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டலும் கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கண்ணனை, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் செ.ம.வேலுசாமி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் கண்ண னின் மனைவி சாந்தியிடம் ரூ.10 ஆயிரத்தை உதவி தொகையாக வழங்கினார்.
அதேபோல் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவை தங்கம் எம்.எல்.ஏ. கண்ணனின் சிகிச் சைக்காக ரூ.20,000 பணத்தை அவரது மனைவி சாந்தியிடம் கொடுத்தார்.
கோவை நகரம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பி்ல இருந்தனர். நகரின் முக்கிய இடங்களில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இன்னொரு டிரைவரும் தீக்குளிக்க முயற்சி :
கண்ணன் தீக்குளித்த பதட்டம் நீங்காத நிலையில் செல்வம் என்ற இன்னொரு ஆட்டோ ஓட்டநரும் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு கூடியது.
இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அவர் தீக்குளிக்க முயன்றார்.
ஸ்டிரைக்:
இந்த நிலையில், இன்று காலை முதல் கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் ஆட்டோக்கள் ஓடவில்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூட ஸ்டிரைக் நடந்து வருகிறது.
இதற்கிடையே பிரச்சினைக்குத் தீர்வு காண போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications