2002ம் ஆண்டு கலவரம் - குஜராத் அரசுக்குசுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் 21 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசு மற்றும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அமீனா பீபி, ஹபீப் ரசூல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், குஜராத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பல எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள்.
இது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிடுகையில், குஜராத் போலீஸார் நடத்திய போலி என்கவுண்டரில் பலியானவர்களாக இவர்கள் இருக்கக் கூடும் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே இதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாநில அரசு மீதும், போலீஸார் மீதும், தற்போதைய குஜராத் டிஜிபி பாண்டே மீதும் மனுதாரர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இதை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அகர்வால், நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications