முதலாளியின் 3 வயது மகளை கடத்தி உடல்முழுவதும் கத்தியால் கீறிய கொடூர இளைஞர்
சென்னை:பணத்தைத் திருடியதற்காக முதலாளி திட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் முதலாளியின் 3 வயது மகளைக் கடத்தி உடல் முழுவதையும் கத்தியால் கீறி காயப்படுத்தினார். அந்த நபரை சில மணி நேரங்களில் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் கேசவன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஈஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர்.
இவரது கடையில் கரூரைச் சேர்ந்த கார்த்தி (26) என்கிற வாலிபர் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு கடையில் வைத்திருந்த பணத்தை கார்த்தி எடுத்து விட்டார்.
இதைக் கண்டுபிடித்த கேசவன், கார்த்தியை கடுமையாக திட்டியுள்ளார்.
இதற்கைக கேசவனை பழிவாங்க முடிவு செய்த கார்த்தி பள்ளிக்குச் சென்று ஈஷாவைக் கூட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
நீண்ட நேரமாகியும் கார்த்தியும், மகளும் வராததால் அதிர்ச்சி அடைந்த கேசவன், வீட்டுக்கு போன் செய்து விசாரித்தார். ஆனால் ஈஷா வரவில்லை என்று மனைவி கூறவே குழப்பமடைந்தார்.
இதையடுத்து போலீசில் புகார் செய்தார். இணை ஆணையர் பாலசுப்பிரமணியம், அண்ணா நகர் துணை ஆணையர் ஜெயகவுரி ஆகியோர் மைக் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களையும் தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர்.
ரோந்து போலீசாரும் சிறுமியையும், வாலிபரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சேத்துப்பட்டு ஸ்பர்ட் டாங்க் ரோட்டில் ஒரு சிறுமி கழுத்து அறுபட்டு ரத்த காயங்களுடன் அழுது கொண்டு இருப்பதை போலீசார் கண்டனர்.
உடனே கேசவனுக்குத் தகவல் தரப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்து, அது தனது மகள்தான் என்று தெரிவித்தார்.
ஈஷாவின் கழுத்து, மார்பு, வயிற்றின் அடிப்பகுதியில் கத்தியால் கீறிய காயங்கள் இருந்ததால் உடனடியாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து கார்த்தியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. கடையில் வேலை பார்த்து வந்த இன்னொரு பையனை அழைத்துக் கொண்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங் களிலும், எழும்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணித்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக கார்த்தி வந்தார். அவரை கடைப் பையன் அடையாளம் காட்டவே போலீஸார் கார்த்தியை மடக்கிப் பிடித்தனர்.
முதலாளி திட்டியதால் அவரை பழிவாங்குவதற்காக மகளை கடத்தியதாக கார்த்தி தெரிவித்தான்.
அரும்பாக்கத்திலிருந்து ஈஷாவுடன் நடந்தே சேத்துப்பட்டு வந்ததாகவும், ஈஷா தொடர்ந்து அழுததால் கத்தியால் உடல் முழுவதும் கீறி அங்கேயே விட்டு விட்டு ரயில் நிலையத்திற்கு வந்து விட்டதாக கார்த்தி கூறியுள்ளான்.
சிறுமி ஈஷாவின் அடிவயிற்றில் காயம் இருந்ததால் பாலியல் பலாத்கார முயற்சி எதுவும் நடந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications