நடுக் கடலில் மீனவர்கள் கோஷ்டி மோதல்<br>வலைகள், நங்கூரம் பறிப்பு - பதட்டம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வீரபாண்டியன் பட்டனம் மற்றும் உவரி மீனவர்களிடையே நடுக்க கடலில் பயங்கர மோதல் நடந்தது. இதில் மீனவர்களின் வலைகள், நங்கூரம் ஆகியவை பறிக்கப்பட்டன.
வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்தவர் பபிலாஸ் கூஞ்சா. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த டியோன்ஸ் மகன் ஜெயபால், முருகேசன் மகன் விஜிகுமார், குயின்டின் மகன் பெலிக்ஸ், சண்முகம் மகன் சேகர், செல்வம், பால்ராஜ், ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் காலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் சென்ற படகு உவரி கடல் பகுதிக்கு சென்றபோது உவரியிலிருந்து 7 பைபர் படகுகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட உவரி மீனவர்கள் வீரபாண்டியன் பட்டணம் விசை படகை வழிமறித்து அதிலிருந்த மீனவர்களை தாக்கியதோடு அந்த விசைப் படகையையும் உவரி கடற்கரைக்கு இழுத்துச் சென்றனர்.
சிறிது தொலைவுக்கு மேல் விசைப்படகை உவரி மீனவர்களால் இழுத்து செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் விசைப்படகு மீனவர்களை தாக்கிவிட்டு அதிலிருந்த வலை, நங்கூரம், கயிறு உள்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர். மேலும் விசைப் படகையும் உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
இதையடுத்து கரை திரும்பிய வீரபாண்டியன் பட்டணம் மீனவர்கள் நடந்ததை ஊராரிடம் கூறினர். பின்னர் மற்ற மீனவர்களின் உதவியுடன் சேதமான விசைப்படகை வீரபாண்டியன் பட்டணம் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பபிலாஸ் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தால் இரு ஊர் மீனவர்களிடையேயும் மோதல் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications