வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.!
ஸ்ரீஹரிகோட்டா: 2 மணி தாமதத்திற்குப் பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று மாலை 6.20 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை குறுகிய நேரத்தில் சரி செய்து ஜி.எஸ்.எல்.வியை விண்ணில் செலுத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 4சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி எஃப்02 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முயற்சிக்கப்பட்டது.
ஆனால் ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஜி.எஸ்.எல்.வி. எஃப்04 ராக்கெட் மூலம் இன்சாட் 4சிஆர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் 1.21 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது. 4.21 மணிக்கு ராக்கெட் கிளம்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த நேரத்திற்கு 15 விநாடிகளுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கெட்டில் உள்ள கம்ப்யூட்டருக்கும், கிரையோஜெனிக் இயந்திரத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கம்ப்யூட்டர் சாதனம், கோளாறை உணர்த்தியது.
இதையடுத்து கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. கோளாறை சரி செய்த பின்னர் ராக்கெட்டை செலுத்த விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். இதையடுத்து 50 நிமிடங்கள் கழித்து மாலை 5.11 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அது மேலும் தாமதமடைந்து மாலை 6.12க்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. ஒரு வேளை இன்று ராக்கெட்டை ஏவ முடியாவிட்டால் 4ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ஏவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், விஞ்ஞானில் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ததால் 6.20 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சரியாக 6.20 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி செலுத்தப்பட்டது. விண்ணில் சீறிப் பாய்ந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி குறிப்பிட்ட பாதையில் வெற்றிகரமாக சென்றது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் சந்தோஷமடைந்து கைகளைத் தட்டியும், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராக்கெட் செலுத்தப்பட்டதை நேரில் பார்த்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
ஜி.எஸ்.எல்.வி. மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இன்சாட் 4சிஆர், தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். நேரடியாக வீடுகளுக்கு தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கு இந்த செயற்கைக் கோள் மிகவும் உதவியாக இருக்கும்.
இதன் எடை 2130 கிலோவாகும். இது விண்வெளியில் 10 ஆண்டுகள் நிலை கொண்டிருக்கும். ஜி.எஸ்.எல்.வி. எஃப்04 ராக்கெட்டின் எடை 415 டன் ஆகும். இன்றைய திட்டத்தின் மொத்த செலவு ரூ. 250 கோடியாகும்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2001, 03, 04, 06 ஆகிய ஆண்டுகளில் ஜி.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் முதல் மூன்று ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட ராக்கெட்தான் தோல்வியில் முடிந்தது.












Click it and Unblock the Notifications