மன்னார்: புலிகள் - ராணுவம் கடும் மோதல்
கொழும்பு:இலங்கையின் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வவுனியா மாவட்டத்தில் ராணுவம் தீவிர தாக்குதலைத் தொடுத்துள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் தற்போது புலிகளுடன் அது மோதத் தொடங்கியுள்ளது.
கவச வாகனங்கள், குண்டு வீச்சுடன் கூடிய தாக்குதலை ராணுவம் மேற்கொண்டுள்ளது. புலிகள் வசம் உள்ள பகுதிகளைப் பிடிக்கும் நோக்கில் இந்தப் புதிய தாக்குதலை ராணுவம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மன்னார், சிலவத்துரை ஆகிய பகுதிகளில் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழர்களை மீட்கும் நோக்குடன்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.