அதிமுகவுடன் கூட்டணியா? -வெங்கையா நாயுடு
சென்னை: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் மக்களை முட்டாளாக்கும் வகையில் பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருவதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் எடுத்துள்ள நிலை முரண்பாடாக உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் சேர்ந்து மக்களை முட்டாளாக்கும் வகையில் மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன.
வருகிற 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள் போபாலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தின்போது அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
மேலும், அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம். அதுதொடர்பாக ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் தற்போது தீவிரவாதிகளின் கூடாரமாகி விட்டது. இதற்கு மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையே முக்கிய காரணம். மத்திய அரசின் போக்கால் இன்று தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது என்றார்.
பாஜக-அதிமுக கூட்டணி உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நாயுடு,
அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். ஜெயலலிதா 3வது அணியில் தற்போது உள்ளார். அதனால் கருத்து வேறுபாடு உள்ளது என்றார் வெங்கையா.












Click it and Unblock the Notifications