பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!
தேனி: தேனி மாவட்டத்தில் நடுரோட்டில் பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (52). இவருக்கு தெய்வம் (45) என்ற மனைவியும், ரமேஷ் (26), ராஜிவ் (23) என்ற மகன்களும் உள்ளனர்.
கோடீஸ்வரன் மயிலாடும்பாறை காவல்நிலையத்திலும், அவரது மகன் ரமேஷ் மதுரையில் உள்ள சிறப்பு காவல் படையிலும் தலைமைக் காவலர்களாக உள்ளனர். ரமேஷின் தாய் மாமா ராமசாமி தேவராத்தில் வசித்து வருகிறார்.
தாய் மாமன் ராமசாமியின் மகள் வாணி (26) வருசநாடு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சிறு வயதிலிருந்தே மாமன் மகள் மீது ரமேஷுக்குக் காதல் ஏற்பட்டது. வாணிதான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று கூறி வருவாராம்.
ரமேஷின் குடும்பத்தாரும் அதை ஆதரித்துள்ளனர். வாணிக்குத்தான் தனது அத்தை மகனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரு ஆசிரியரைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டார். இதனால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் தேனியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வாணியின் கழுத்தில் தனது குடும்பத்தாரின் ஆதரவுடன் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றுள்ளார் ரமேஷ்.
இதைப் பார்த்து அதிர்ந்த திருமண வீட்டார் ரமேஷையும், அவரது குடும்பத்தினரையும் தடுத்துப் பிரித்து விலக்கி விட்டனர். பின்னர் வாணி, ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ரமேஷ் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications