மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரைbr/தாக்கிய திமுக செயலாளரின் தம்பி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய தம்பிக்கு பரிந்து கொண்டு பேசிய திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லத்துரை. இவரது அண்ணன் இளங்கோ. இவர் கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார்.
சேர்ந்தமரம் அருகே உள்ளது வலசை பாப்பான் ஓடை. இந்த ஓடையில் செல்லத்துரை மற்றும் சிலர் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சேர்ந்தமரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் சுந்தரர் ராஜன், முருகன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் வலசை பாப்பான் ஓடை பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அங்கு செல்லத்துரை உள்பட 6 பேர் மணலை அள்ளி டிராக்டரில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். உடனே போலீசார் மணல் அள்ளிய 6 பேரையும் சுற்றி வளைத்தனர்.
அப்போது செல்லத்துரையை முருகன் என்ற போலீஸ்காரர் பிடித்தார். அதைக் கண்டதும் மற்ற 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். போலீஸ் பிடியில் சிக்கிய செல்லத்துரை போலீஸ்காரர் முருகனை முகத்தில் பலமாக தாக்கி, கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டார்.
இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு 2 பற்கள் உடைந்தது. கைகளிலும் காயம் ஏற்பட்டது. அப்போது செல்லத்துரையின் அண்ணன் இளங்கோ சம்பவ இடத்திற்கு வந்தார். அவர், எப்படி என் தம்பியை பிடிக்கலாம், நான் யார் தெரியுமா, என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாராம்.
இதையடுத்து மணல் கடத்தலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி இளங்கோவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா வழக்குப் பதிவு செய்தார்.
செல்லத்துரை மற்றும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காயமடைந்த காவலர் முருகன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications