திருப்பதி பிரம்மோற்சவம்: பாதுகாப்பு அதிகரிப்பு
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் வரும் 15ம் தேதி பிரம்மோற்சவம் நடைபெறவிருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் அம்மாநிலத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், வருகிற 15ம் தேதி பிரம்மோற்சவம் ஆரம்பமாகின்றது. இது தொடர்பாக கோவில் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற்கு உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இதனால் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தின் போதும், சாமி ஊர்வலம் நடைபெறும் போதும் முக்கிய விசேஷ காலங்களிலும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
திருப்பதி மலைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மலை அடிவாரத்தில் இருந்து மலையின் மேல்பகுதி வரையுள்ள மலைப்பாதையில் போலீசார் பாதுகாப்புக்கு ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். கோவிலைச் சுற்றி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
திருப்பதி கோவிலுக்கு வரும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே மலைப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படும்.
மலைப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும் பாதைகளில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை நவீன கருவிகள் மூலம் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், போலீஸாரின் நடவடிக்கைகளுக்கும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications