'விமான குழப்பம்': 50 பயணிகள் தவிப்பு-br/திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
திருச்சி: இலங்கை தனியார் விமான நிறுவனம் செய்த குழப்பத்தால் திருச்சியிலிருந்து கொழும்பு செல்லவிருந்த 150 பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
திருச்சியிலிருந்து கொழும்பு செல்லும் மிஹின் லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் காலை 7.40 மணிக்கு கொழும்பு புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
நேற்றும் இந்த விமானத்தில் பயணிப்பதற்காக பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். மொத்தம் 150 பயணிகள் பயணத்திற்காக காத்திருந்தனர்.
இந் நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உரிய நேரத்தில் புறப்படவில்லை. இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல நேற்று முன்தினமும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு 150 பேர் செல்ல முடியாமல் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திற்கு விமான நிறுவன ஊழியர்கள் வரவழைத்து அவர்களை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
இதை அறிந்த நேற்று பயணம் செய்யவிருந்த 150 பயணிகள், தங்களையும் இன்றே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இவர்கள் உங்களுக்கு முன்பாகவே போக வேண்டியவர்கள் ஒரு நாளாக காத்துள்ளனர். இவர்களை அனுப்பி விட்டு அந்த விமானம் இரவில் திரும்பி வரும். அந்த விமானத்தில் உங்களை அனுப்புகிறோம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் இதை ஏற்காத பயணிகள் சிலர் விமான நிறுவன ஊழியர்களிடம் தகராறு செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பழைய பயணிகளையே முதலில் அனுப்பி வைத்தனர் விமான நிறுவன ஊழியர்கள். பின்னர் புதிய பயணிகளை மீண்டும் ஹோட்டல்களுக்கு அனுப்பி தங்க வைத்தனர்.
மாற்று ஏற்பாடுகள் குறித்து விமான நிறுவனம் முறையாக தகவல் தெரிவிக்காமல் தங்களை இப்படி அலைக்கழிப்பதாக பயணிகள் புலம்பியபடி இருந்தனர்.












Click it and Unblock the Notifications