ஜெயலலிதா வீட்டிற்கும் வந்த பாக்கியலட்சுமி!
சென்னை:
மதுரைக்கு வந்த வைகோவின் காரில் அரிவாளுடன் ஏறிய பெண் ஆகஸ்ட் 24ம் தேதி சென்னையில் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றார் என அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வெள்ளைமாடத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2ம் தேதி மதுரை ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் காரில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு ஏறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், அந்த பெண் பெற்றோருடன் 10 நாட்களாக இருந்ததாகவும் மனநிலை சரியில்லாதவர், கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் வீட்டைவிட்டு வெளியில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்தப் பெண்ணை பற்றிய தகவல் முற்றிலும் தவறானது ஆகும்.
இந்தப் பெண் கடந்த 24ம் தேதி காலை 9-30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் கையில் ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் பையை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயற்சித்தார்.
அன்றைக்கு ஜெயலலிதா வீட்டு முன் காங்கிரசார் முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க நான் போயஸ் கார்டன் சென்றபோது அந்தப் பெண் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ததைப்பார்த்து நான் தடுத்து நிறுத்தினேன்.
அப்போது வீட்டின் முன் பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸ் லதா அந்தப் பெண்ணை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
உண்மை இவ்வாறு இருக்க 10 நாட்களுக்கு முன்பு அந்தப்பெண் தங்கள் வீட்டிலேயே இருந்ததாக அவரது பெற்றோர் சொல்வது பொய். அதே போல் 3 நாட்களுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், சென்னை சென்று தலைவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவரது பெற்றோர் சொல்வதும் பொய்.
10 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா வீ்ட்டுக்கு வந்தவர் அடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஏன் சந்திக்க வர வேண்டும்?. தமிழகத்தில் வேறு அரசியல் கட்சி தலைவர்களே கிடையாதா?. அவர்களை பார்க்க ஏன் அவர் முயற்சி செய்யவில்லை?.
எனவே திட்டமிட்ட தீய நோக்கத்தோடு அந்தப் பெண் வந்துள்ளார். போலீசார் கைது செய்த அந்த பெண்ணை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்தற்கு முன்பாகவே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லியுள்ளனர். அதற்கு காரணம் என்ன?
இந்த பெண் யாருடைய தூண்டுதலின் பேரில்தான் தீய நோக்கத்தோடு வந்துள்ளார். அந்த பெண் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து அசம்பாவித சம்பவத்தை நடத்த திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத் தோன்றுகிறது. இந்த பெண்ணின் பின்னால் தீவிரவாத குழுவினர் எவரும் இருப்பார்களோ என்ற அச்சம் எழுகிறது.
இதனை விசாரிக்க வேண்டும் என்று கலைராஜன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலீஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரனிடம் கேட்டதற்கு,
கலைராஜன் எம்எல்ஏ கொடுத்த புகார் மீது விசாரணை நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதியே அந்த பெண்ணை போயஸ் கார்டனில் தடுத்து நிறுத்தியதாக கலைராஜன் எம்எல்ஏ கூறுகிறார். அப்படியானால் அப்போதே ஏன் அவர் போலீசாரிடம் புகார் சொல்லவில்லை?.
காலம் தாழ்ந்து புகார் வந்தாலும் எங்கள் கடமையை நாங்கள் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications