ரூ. 300 கோடியில் சென்னையில் தேசிய புற்று நோய் கழகம்!
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ரூ. 300 கோடி முதலீட்டில், சர்வதேச தரத்திலான தேசிய புற்று நோய் கழகம் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும். இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் கழகம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.
மருந்து கிடங்கி கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து, புதிதாக கட்டப்படும்.
தேசிய புற்றுநோய் கழகம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி ஒதுக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக இது விளங்கும். நோயாளிகளுக்கு சிகிச்சை தருவது மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.
நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.
10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ. 3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றுக்கு மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications