வரலாறு படைக்கும் மேட்டூர் அணை:br/ஒரே ஆண்டில் 4வது முறையாக நிரம்புகிறது
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4வது முறையாக நிரம்பவுள்ளது.
கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகளிலிருந்து பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் மேட்டூரை அடைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119.6 அடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
இதனால் கடந்த மூன்று மாதங்களில் 4வது முறையாக தனது முழு கொள்ளளவை அணை எட்டவுள்ளது.
ஜூலை மாதம் முதன்முறையாக நிரம்பிய மேட்டூர் அணை, பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை (ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 26) நிரம்பியது. இந்த நீர் திறந்துவிடப்பட்டபோதெல்லாம் 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோரங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் மூழ்கின.
இந் நிலையில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டவுள்ளது. ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை நிரம்புவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications