விளம்பரப் பலகைகள் அகற்றம் தொடக்கம்!
சென்னை:
சென்னை நகரில் அங்கீகாரம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியை காவல்துறை தொடங்கியுள்ளது.
சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ள முக்கால்வாசி விளம்பரப் பலகைகள் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டவை ஆகும். இதன் காரணமாக மாநகராட்சிக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
அரசியல் செல்வாக்கு, அடியாள் கூட்டம் என ஒரு சிலர் அடாவடியாக நடந்து கொண்டதாலும், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியதாலும், முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்த விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை.
இந்த நிலையில் இதுபோன்று வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு டாக்டர் ராமதாஸ், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட 6 மாநகரங்களிலும் விளம்பரப் பலகைகளே கூடாது என்ற முடிவை தமிழக அரசு சமீபத்தில் எடுத்தது.
இதையடுத்து சென்னை நகரில் எங்கெல்லாம் விளம்பர பலகைகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன என்று போலீசார் கணக்கெடுப்பு நடத்தினார்கள். 25ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் நகரின் அனைத்துப் பகுதியிலுமே நூற்றுக்கணக்கான விளம்பரப் பலகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றை அகற்றும் பணி நேற்று (03-09-2007) காலை தொடங்கியது. முதலில் வடபழனியில் இந்த நடவடிக்கை தொடங்கியது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வடபழனி ஆற்காடு சாலை, நூறடி ரோடு, வடபழனி பஸ் நிலையம், ராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் விளம்பர பலகைகளை அகற்றினர். இந்த பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பிற்பகல் வரை 20 பலகைகள் எடுக்கப்பட்டன.
இதேபோல நகரின் பிற பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறுகையில்,
சென்னை நகரில் அனுமதி இல்லாமல் விளம்பரப் பலகைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் முழுவதுமாக அகற்றப்படும்.
விளம்பர் பலகைகள் வைப்பது முறைப்படுத்தப்படும். பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளதைப் போல சென்னையிலும் விளம்பரங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில்,
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி பட்டியல் போட்டு அகற்ற ஆரம்பித்துள்ளோம். அனுமதி இல்லாமல் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.
நெல்லையிலும்...
இதற்கிடையே திருநெல்வேலியிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளம்பர பலகைகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது.












Click it and Unblock the Notifications