அணு ஒப்பந்தம்: பிரணாப் தலைமையில் 15 பேர் குழு!
டெல்லி:
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆராய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இதை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இப்படி இரு தரப்பும் இரு முனையில் பிடிவாதமாக இருப்பதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண குழு ஒன்றை அமைத்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செயல்படுவார். இக்குழுவில் அரசு சார்பில் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், கபில் சிபல், சைபுதின் சோஸ், பிருத்விராஜ் செளகான், லாலு பிரசாத் யாதவ், டி.ஆர். பாலு, சரத்பவார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, ஏ.பி.பர்தான், டி.ராஜா, தேவப்பரதா பிஸ்வாஸ், டி.ஜே.சந்திரசூடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குழு உறுப்பினர்கள் குறித்த விவரத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்ட பிரணாப் முகர்ஜியிடம், குழுவின் முதல் கூட்டம் எப்போது நடக்கிறது, அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications