நாடாளுமன்றத்தில் மீண்டும் அமளிbr/இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை மக்களவை கூடியதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் எம்.பியாக தேர்வு பெற்றுள்ள சுமன் மகதோ பதவியேற்றுக் கொண்டார். பின்னர் கேள்வி நேரம் எடுக்கப்படுவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
அப்போது எழுந்த பாஜக தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
அவருடன் பிற பாஜக உறுப்பினர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.
தொடர்ந்து அமளியாக இருந்ததால் முதலில் பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சாட்டர்ஜி. பிறகு 12 மணிக்கு கூடியபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சோம்நாத் சாட்டர்ஜி.
இதேபோல ராஜ்யசபாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்ததால் அங்கும் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவையை அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
நேற்றும் இதே கோரிக்கை காரணமாக இரு அவைகளும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications