அன்புமணிக்கு மீண்டும் மீண்டும் சிக்கல்br/அவதூறு வழக்கில் சிக்கும் அபாயம்
டெல்லி:
டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) பதிவாளர் நியமனம் தொடர்பாக தெரிவித்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காததற்காக, ஏன் உங்கள் மீது கோர்ட் அவதூறு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திடாதது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்ததது.
24 மணி நேரத்திற்குள் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 49 சான்றிதழ்களில் கையெழுத்துப் போட்டார் அன்புமணி.
ஆனால் அனைத்து சான்றிதழ்களிலும் அவர் கையெழுத்துப் போடவில்லை என்று கூறி ஏராளமான டாக்டர்கள் நேற்று உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏன் அனைத்து பட்டச் சான்றிதழ்களிலும் அமைச்சர் கையெழுத்திடவில்லை என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மொத்தம் 69 சான்றிதழ்களில் அன்புமணி கையெழுத்திட வேண்டும். ஆனால் 49 பட்டங்களில் மட்டுமே அவர் கையெழுத்திட்டுள்ளார். இன்னும் 20 சான்றிதழ்களில் அவர் கையெழுத்திட வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ்களிலும் தான் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக தற்போது அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணியின் வழக்கறிஞர்களான முகுல் குப்தா, முக்தா குப்தா ஆகியோர் நீதிபதி ரவீந்தர் பட்டை அணுகி தெரிவிக்கையில், கையெழுத்து வேண்டி தன்னை அணுகும் மாணவர்களுக்கு கையெழுத்திட்டுத் தர அமைச்சர் தயாராக உள்ளார். அமைச்சரை அணுகும் எந்த மாணவருடைய சான்றிதழிலும் கையெழுத்திட மாட்டேன் என அமைச்சர் மறுக்க மாட்டார் என்றார்.
மீண்டும் நோட்டீஸ்:
இந்த நிலையில் நேற்றே அன்புமணிக்கு இன்னொரு அதிர்ச்சியை டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்தது.
எய்ம்ஸ் பதிவாளர் நியமனம் தொடர்பாக (இது தொடர்பாகத்தான் அன்புமணிக்கும், வேணுகோபாலுக்கும் இடையே தற்போது பிரச்சினை நிலவுகிறது) டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்? இதற்காக உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் மனோஜ் குமார் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் பதிவாளர் பதவியில் நிரந்தரமாக யாரும் இல்லை. தற்போதைய பதிவாளர் தற்காலிக அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நிரந்தர பதிவாளரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹிமா கோலி, பதிவாளர் நியமனம் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என எய்ம்ஸ் நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தது. ஆனால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்ளாகியும் இன்னும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கீதா மிட்டல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோரைக் கண்டித்த நீதிபதி இருவருக்கும் அவதூறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த நோட்டீஸுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து போட்டுள்ள கிடுக்கிப் பிடியால் அன்புமணிக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications