வைகுண்டம் ஆலையை மூடும் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
மதுரை:
ஜெயா டிவியின் பங்குதாரரும், தொழிலதிபருமான வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வைகுண்டராஜன் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
வி.வி.மினரல்ஸ் தொழிற்சாலை அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்று, அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நெல்லை தலைமை என்ஜினீயர் மற்றும் அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, அதில் திருப்தி அடைந்துள்ளனர்.
இந் நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி எங்களது தொழிற்சாலையை ஆய்வு செய்ததாகவும், அதில் 3 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தொழிற்சாலையில் இருந்து கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாகவும், அந்த கழிவுப்பொருட்களை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நிலத்தடி நீரை மாசுப்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சம்பந்தமாக 5 விவரங்களை கேட்டிருந்தேன். எந்த அதிகாரி எனது தொழிற்சாலையை ஆய்வு செய்தார், அவரது பெயர், பதவி, ஆய்வு அறிக்கையின் நகல் போன்ற விவரங்களை கேட்டேன். அதற்கு, அதிகாரிகள் எந்த பதிலும் அனுப்பவில்லை.
இதற்கிடையில் எங்கள் தொழிற்சாலைக்கு மின் வினியோகத்தை நிறுத்தச் சொல்லியும், தொழிற்சாலையை மூடச்சொல்லியும் கடந்த மாதம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். எங்களது தொழிற்சாலையை நம்பி சுமார் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், எங்கள் தொழிற்சாலையை நடத்த யாரும் இடையூறு செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும், மின் வினியோகத்தை நிறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நிலுவையில் இருக்கும்வரை நிறுவனத்தை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் வைகுண்டராஜன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா, சிவக்குமார் ஆகியோர்,
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வி.வி.மினரல்ஸ்
நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், நெல்லை மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின்போது வைகுண்டராஜனும் நீதிமன்றத்தில் இருந்தார்.












Click it and Unblock the Notifications