6 அணு குண்டுகளுடன் பறந்த அமெரிக்க விமானம்!!
வாஷிங்டன்:
6 அணு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட குண்டு வீச்சு விமானம் அமெரிக்கா மீது பறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிடம் நூற்றுக்கணக்கான அணுகுண்டுகளும், அணு ஏவுகணைளும் குவிந்து கிடக்கின்றன. இவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல இதற்கென உள்ள சரக்கு விமானங்களைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் நடந்துள்ளது. விமானப்படையைச் சேர்ந்த குண்டு வீச்சு போர் விமானமான பி-52 ரக விமானத்தில் ஆறு அணு ஏவுகணைள் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த நிலையில் அந்த குண்டு வீச்சு விமானம் வடக்கு டகோடாவிலிருந்து லூசியானா வரை பறந்து சென்றுள்ளது. ஆறு அணு ஏவுகணைளும் விமானத்தின் இறக்கைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் ராணுவத் தலைமை புகார் கூறியுள்ளது.
விரிவான விசாரணைக்கு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு மூத்த விமானப்படை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபோல குண்டு வீச்சு விமானத்தின் இறக்கையில் அணு ஆயுதங்களை பொருத்தி எடுத்துச் செல்வது மிகவும் அபாயகரமானது.
கடந்த 1966ம் ஆண்டு ஸ்பெயினிலும், 1968ம் ஆண்டு கிரீன்லேண்டிலும் அணு ஆயுதங்களை எடுத்துச் சென்ற இரு போர் விமானங்கள் விபத்தில் சிக்கின.
இதையடுத்து விமானங்களில் பொருத்தப்பட்ட நிலையில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆறு அணு ஏவுகனைகளுடன் அமெரிக்க விமானப்படை விமானம் பறந்து சென்றது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications