'மத்திய அரசும் போய்டும், மாநில அரசும்br/போய்டும்' - பொன். ராதா ஆரூடம்!
திருநெல்வேலி:
விரைவில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கவிழ்ந்து விடும். அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் திமுக தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என்று பாஜ மாநில துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தென்காசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நெல்லையில் வரும் 18, 19ம் தேதிகளில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர்கள் ரவிசங்கர் பிரசாத், திருநாவுக்கரசர், மாநில தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இரண்டு நாள் நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
வரும் 12ம் தேதி நாடு முழுவதும் ராமர் பால பாதுகாப்பு அமைப்பு சார்பில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் காலை 8 மணி முதல் 11 மணி வரை நடக்கும். நெல்லையிலும் இப்போராட்டம் நடக்கும்.
19ம் தேதி ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இடிக்கப்படாமல் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடக்கிறது.
டைட்டானியம் தொழிற்சாலை வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்நிறுவனம் நிலம் வாங்க விளம்பரம் செய்துள்ளது. இதற்கு இரண்டு ஏஜென்டுகளை நியமித்துள்ளது. அரசு தரப்பில் யாரையும் கட்டாயப்படுத்தி நிலத்தை விற்கவோ, அச்சுறுத்தவோ கூடாது.
ஒருவேளை அச்சுறுத்தல், கட்டாயத்திற்கு உட்பட்டு சிலர் நிலத்தை விற்க முன்வந்தால் இடைத் தரகர்கள் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்திருப்பதில் மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்களை ஏமாற்ற மிகப் பெரிய நாடகத்தை நடத்துகின்றனர். இப்பிரச்சனை குறித்து அத்வானி நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இனிமேல் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்தால் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அத்வானி கூறியதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.
கம்யூனிஸஸ்ட்கள் மத்திய அரசை கவிழ்க்க மாட்டார்கள். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள்.
நாடு நன்றாக இருக்கவேண்டும். சட்டம் ஓழுங்கு சிறப்பாக பராமரிக்க வேண்டும், தூய்மையான ஆட்சி அளிக்க வேண்டும் என்று யாரல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். நாங்களும் அந்த கூட்டணியை ஏற்றுக் கொள்வோம்.
பாஜகவுடன் அதிமுக, தேமுதிக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்க முன் வருவதை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறமுடியாது. இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீண்டும் கூட்டணி வைத்தால் தான் அது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும்.
மணல் கொள்ளை, கல்வி துறைகளில் சீர்கேடு நிலவுகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி கடனாக இருக்க வேண்டியவர்கள் திமுகவுக்கு நன்றிக் கடனாக இருக்கிறார்கள். இதனால் மக்கள் மீது திமுகவிற்கு அக்கறை இல்லாமல் இருக்கிறது. மத்திய அரசு கவிழும்போது மாநில அரசும் கவிழ்ந்து விடும். அரசு தவறாக நடந்தால் தேர்தலுக்கு சரியான நேரம் என்று அர்த்தம். இப்போது தேர்தலுக்கு சரியான தருணம்தான் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications