போலீசை தாக்கிவிட்டு கைதி ஓட்டம்
விளாத்திகுளம்:
விருதுகநர் மாவட்டம் விளாத்திகுளத்தில் காவலர்களைத் தாக்கி விட்டு கைதி தப்பி ஓடினார்.
விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த 18-05-2007 அன்று புதூர் அடுத்த சுப்புலாபுரம் விலக்கில் உள்ள மின் கம்பங்களில் மின்சார வயரை திருடினார். இதே போல் சங்கரலிங்கபுரத்திலும் மின்சார வயரைத் திருடினார்.
இது குறித்து புதூர் காவல்நிலையத்தில் தனித் தனியாக புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஈஸ்வரனை கைது செய்து விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் ஈஸ்வரனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக புதூர் காவல் நிலைய ஏட்டுகள் வேலுசாமி, சக்கையா ஆகியோர் அவரை கோவில்பட்டி சப்-ஜெயிலிலிருந்து விளாத்திகுளத்திற்கு பஸ்சில் அழைத்து வந்தனர்.
பின்னர் ஈஸ்வரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் அவரை கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைப்பதற்காக ஏட்டுகள் இருவரும் பஸ்சில் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
பஸ்சில் கூட்டமாக இருந்ததால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திடீரென்று ஈஸ்வரன் ஏட்டுகளை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக் கண்ட வேலுச்சாமி, சக்கையா ஆகியோர் அவரை விரட்டிச் சென்றனர். ஆனா ஏட்டய்யாக்களை விட ஈஸ்வரன் வேகமாக ஓடியதால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
போலீசை தாக்கிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏட்டுகள் வேலுசாமி, சக்கையா ஆகியோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய கைதி ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications