ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 100 பக்தர்கள் பலி
உதய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே மலைப் பகுதியில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானார்கள்.
ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுஃபி முனிவர் ராம்தேவ்ராவின் ஆலயத்திற்கு இந்துக்களும், முஸ்லீம்களும் பெருமளவில் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு லாரிகள், வேன்கள், பேருந்துளில் வந்து கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் ராஜசமுந்த் மாவட்டம் தேசுகிரி கி நால் கிராமம் அருகே உள்ள மலைப் பகுதியில் வரிசையாக பக்தர்களுடன் லாரிகள் வந்து கொண்டிருந்தன.
அப்போது ஒரு லாரி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடி மலையிலிருந்து உருண்டு விழுந்தது.
விழுந்த வேகத்தில் லாரியின் அடியில் சிக்கி பக்தர்கள் நசுங்கினர். இதில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 130 பேர் படுகாயமடைந்தனர்.
இரவு நேரத்தில் விபத்து நடந்ததால், மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கிரேன்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. உடல்களை மீட்டு அவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. சில உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.
விபத்தில் சிக்கிய லாரி, ராஜசமுந்த்திலிருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 200 பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications