ஷெரீப்பை மீண்டும் நாடு கடத்துவோம்br/பெனசீருடன் ஒப்பந்தம் ரத்து - பாக். அமைச்சர்
இஸ்லாமாபாத்:
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினால் அவரை மீண்டும் நாடு கடத்துவோம். பெனாசிர் பூட்டோவுக்கும், அதிபர் முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என்று அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.
முஷாரப்பால் நாடு கடத்தப்பட்ட நவாஸ் ஷெரீப்பும், தானாகவே நாட்டை விட்டு வெளியேறி விட்ட பெனாசிர் பூட்டோவும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரவுள்ள நிலையில், இருவரும் மீண்டும் நாடு திரும்பப் போவதாக அறிவித்துள்ளனர். வருகிற திங்கள்கிழமை நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார் ஷெரீப்.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பை எக்காரணம் கொண்டும் ஹீரோ ஆக அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார். ஷெரீப் மீண்டும் வந்தால் அவரை மீண்டும் நாடு கடத்துவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார். அவர் ஒரு வேளை பாகிஸ்தானுக்கு வந்தால், விமான நிலையத்திலேயே அவரைக் கைது செய்வோம். ஒரு நாள் சிறையில் வைத்து விட்டு பின்னர் அவரை நாடு கடத்துவோம்.
லண்டனுக்கோ, சவூதிக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ அவரை நாடு கடத்துவோம். அவர் ஹீரோ ஆக அனுமதிக்கப்பட மாட்டார் என்று எச்சரித்தார்.
பெனாசிருடன் ஒப்பந்தம் ரத்து:
இந்த நிலையில் பெனாசிருக்கும், அதிபர் முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தம் ரத்தாகி விட்டதாகவும் ரஷீத் அறிவித்துள்ளார்.
மீண்டும் அதிபராக விரும்பும் முஷாரப் அதற்காக முக்கியக் கட்சி ஒன்றுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். இதற்காக அவர் பெனாசிரை அணுகினார். இருவரும் அபுதாபியில் நேரிலும் சந்தித்துப் பேசினர். இதன் அடிப்படையில் அவர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த ஒப்பந்தத்தை முஷாரப் ரத்து செய்து விட்டதாக ரஷீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெனாசிருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை வேண்டாம் என்று கூறி அதிபர் முஷாரப் ரத்து செய்து விட்டார். எனவே அந்த ஒப்பந்தம் முறிந்து விட்டது என்றார்.
ஒப்பந்தம் ரத்தானதற்கு முக்கியக் காரணம், ஒருவர் 3வது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது என்ற சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பெனாசிர் கோரி வந்தார். ஆனால் இதை முஷாரப் ஏற்கவில்லை. இதையடுத்தே ஒப்பந்தம் ரத்தாகி விட்டதாக கூறப்படுகிறது.
பெனாசிரும், நவாஸ் ஷெரீப்பும் இரு முறை பிரதமர் பதவியை வகித்துள்ளனர். அவர்கள் மீண்டும் அப்பதவிக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் அந்த சட்டத் திருத்தத்தையே முஷாரப் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெனாசிருடன் ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தாகி விட்ட நிலையில், ஷெரீப் மீண்டும் நாடு கடத்தப்படுவார் என்ற எச்சரிக்கையாலும் பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications