'மாயா' வெங்கடேசன் பங்களாவில் ரெய்டு
திருநெல்வேலி:
சிமென்ட் தொழிற்சாலை கட்டுவதாக கூறி காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடி செய்த மோசடித் தொழிலதிபர் மாயா வெங்கடேசனின் நெல்லை பங்களாவில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
நாகப்பட்டிணம் மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்தவர் மாயா வெங்கடேசன். இவர் நெல்லையில் பல கோடி ரூபாய் செலவில் சிமிண்ட் தொழிற்சாலை கட்டப்போவதாக அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரமாண்டமான முறையில் நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அடிக்கல் நாட்டினார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாயா வெங்கடேசன் புதிய தொழிற்சாலைக்கான கட்டிடங்கள் கட்ட டெண்டர் விட்டார்.
இந்த சிமென்ட் தொழிற்சாலை கட்டுவதற்கு தென் மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்தன. அந்நிறுவனங்களிடம் மாயா வெங்கடேசன், அனைவருக்கும் ஒப்பந்தம் தருவதாக சொல்லி முன்பணமாக பல கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து சிபிசிஐடி எஸ்.பி பவானீஸ்வரி, டி.எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார். மாயா வெங்கடேசன் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் நெல்லை வந்துள்ளனர். அவர்கள் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
தொழிற்சாலை கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலங்கள் யார் பெயரில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு அவர் கட்டியுள்ள பங்களாவிலும் சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications