பெட்ரோல், டீசல் விலை உயருகிறது
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த மத்திய பெட்ரோலியத்துறை திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி வாக்கில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைப் பொறுத்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சமீப காலமாக கச்சாப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதால், இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறைக்கு, பெட்ரோலிய நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
விலையை பெருமளவு உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் எண்ணை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவை எச்சரித்தன.
இதையடுத்து மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த பெட்ரோலியத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை அது, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 வரையும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம், காஸ் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையில் உயர்வு இருக்காது என கருதப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் விலை உயர்வை மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications