கருத்துக் கேட்பில் கலாட்டா - கலெக்டரைbr/அடிக்கப் பாய்ந்த பொதுமக்கள்!!
கடலூர்:
கடலூரில் அமையவுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும் கலாட்டா நடந்தது. பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை நோக்கி இருக்கைகளை எரிந்தும், அடிக்கவும் பாய்ந்ததால் போலீஸார் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.
கடலூர், தியாகவள்ளியில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் அமையவுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டமிட்டது.
இதையடுத்து தியாகவள்ளி, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆட்சித் தலைவர் எழுந்து பேச முயன்றபோது, பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எழுந்து, எங்களுக்கு இங்கு எந்த மின் நிலையமும் வேண்டாம். நிலங்களைத் தர மாட்டோம் என கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்கள் படு ஆவேசமாக ஆட்சித் தலைவர் இருந்த மேடைப் பகுதியை நோக்கி கோஷமிட்டபடி ஓடி வந்தனர். சிலர் இருக்கைகளை எடுத்து மேடையை நோக்கி எறிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் மேடை மீதி ஏறி ஆட்சித் தலைவரைத் தாக்கவும் முயன்றனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார் கூடுதல் போலீஸாரை வரவழைத்தனர். பின்னர் விரைந்து வந்த போலீஸார் கூட்டம் நடந்த அரங்கத்திற்குள் நுழைந்து, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் ஆட்சித் தலைவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் போலீஸார் தங்களை அடித்து விரட்டியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர். இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. பிருந்தாதேவி, டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னர் கருத்துக் கேட்புக் கூட்டம் பிருந்தாதேவி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.












Click it and Unblock the Notifications