திட்டமிட்டபடி சேலம் கோட்டம்: கருணாநிதிbr/தொடங்கி வைப்பார் - வீரபாண்டியார் அறிவிப்பு
சேலம்:
சேலம் ரயில் கோட்டம் திட்டமிட்டபடி வருகிற 14ம் தேதி தொடங்கி வைக்கப்படும். முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் ரயில் கோட்டத்தை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்ற நோக்கில் கேரளா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் உச்சநீதிமன்றத்தை அணுகிப் பார்த்தனர். அது சரிப்பட்டு வரவில்லை. இதையடுத்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை நெருக்க ஆரம்பித்தனர்.
கேரளாவின் நெருக்குதலுக்கு இளகிய லாலு பிரசாத், சேலம் கோட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.
இதனால் கொதிப்படைந்த அரசியல் கட்சியினர், பல்வேறு வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் ஓணம் பண்டிகைக்கு முன்பாக கேரளா செல்லும் ரயில்களை மறித்து கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி ரயில் கோட்டம் தொடங்கப்படும் என லாலு பிரசாத் யாதவ் முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லாலு பிரசாத் யாதவை கேரள எம்.பிக்கள் சந்தித்து இதுகுறித்து பேசினர். அப்போது அவர்களிடம் லாலு பேசுகையில், இதுதொடர்பாக கேரள, தமிழக முதல்வர்கள் பேசி முடிவெடுப்பார்கள். இப்பிரச்சினையை நான் பிரதமரிடமே விட்டு விட்டேன் என்று சொன்னதாக தெரிகிறது.
இதனால் சேலம் கோட்டம் தொடர்பாக தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சேலம் கோட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படும் என அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திட்டமிட்டபடி வருகிற 14ம் தேதி சேலம் ரயில் கோட்டம் தொடங்கப்படும். முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ரயில் கோட்டதைத் தொடங்கி வைக்கிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
வீரபாண்டியார் இப்படி உறுதியாக கூறியுள்ள நிலையில் மறுபக்கம் ரயில் கோட்டத் தொடக்கத்தை தள்ளிப் போடு கேரளத் தரப்பில் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
பிரதமரை சந்திக்கும் அச்சுதானந்தன்:
ரயில் கோட்ட விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் நாளை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.
அப்போது ரயில் கோட்டம் தொடங்கப்படக் கூடாது. தொடக்க விழா ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தக் கூடும் எனத் தெரிகிறது. அவருடன் கேரள மாநில எம்.பிக்களும் பிரதமரை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
சேலம் ரயில் கோட்ட விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் ஒதுங்கிக் கொண்டது போலத் தெரிகிறது. அவரது நடவடிக்கைள் கேரளாவுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி சேலம் ரயில் கோட்டம் 14ம் தேதி தொடங்கப்படுமா என்பதில் தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது












Click it and Unblock the Notifications