குணமடைந்தார் சாந்தி - விரைவில் டிஸ்சார்ஜ்
தஞ்சாவூர்:
மாடுகளுக்கு கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற தடகள வீராங்கனை சாந்தி முழுமையாக தேறி விட்டார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என
டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தோகாவில் நடந்த தெற்காசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் இவருக்கு பெண்களுக்குரிய ஹார்மோன் குறைவாக இருப்பதாக கூறி பதக்கத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
பாலின சர்ச்சையில் சாந்தி சிக்கினாலும் கூட அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ. 1லட்சம் கலர் டிவி ஆகியவற்றை தமிழக அரசு திட்டமிட்டபடி வழங்கி சாந்தியைக் கெளரவித்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் திடீரென தற்கொலைக்கு முயற்சித்தார் சாந்தி. மாடுகளுக்கு வைக்கப்படும் மாத்திரையை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமாரும், சாந்தியின் சிகிச்சையில் தீவிர கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் தற்போது சாந்தி முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார். இன்றைக்குள் அவர் வீடு திரும்பக் கூடும் எனவும் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications