திமுக அணியிலிருந்து விலகினார் டி.ஆர்.!
சென்னை:
திமுக அணியிலிருந்து விலகி விட்டேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என லட்சிய திமுக தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் திடீரென அறிவித்துள்ளார்.
முன்பு திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர் டி.ராஜேந்தர். பிறகு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
அதன் பின்னர் சற்று அமைதியாக இருந்த விஜய டி.ராஜேந்தர் மீண்டும் திமுகவில் இணைந்தார். தேர்தலில் நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏவும் ஆனார். பிறகு மீண்டும் கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மீண்டும் திமுகவிலிருந்து விலகினார்.
இதையடுத்து லட்சிய திமுக என்ற பெயரில் புதிய கட்சி கண்டார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். தேர்தலில் தனது கட்சிக்கு கெளரவமான சீட் தரப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஒரு சீட் கூட கொடுக்கவில்லை ஜெயலலிதா.
இதனால் கடுப்பான ராஜேந்தர் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். சில தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தினார். அவரும் போட்டியிட்டார்.
பிறகு திமுக தரப்பிலிருந்து ராஜேந்தரை அணுகி ஆதரவு கேட்டனர். இதையடுத்து திமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தில் ஜெயலலிதாவை கடுமையாக சாடாமல் திமுக அணியிலிருந்து அதிமுக அணிக்குத் தாவிய வைகோவை மட்டும் மிகக் கடுமையாக சாடிப் பேசினார்.
அவரது அடுக்குமொழிப் பேச்சுக்கும், பிரசாரத்திற்கும் செமத்தியான வரவேற்பும் கிடைத்தது.
தேர்தலுக்குப் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த ராஜேந்தர், அப்போது திமுகவுடன் நெருக்கமாக இருந்த சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார்.
விசு போனதால் விறுவிறுப்பிழந்திருந்த அரட்டைஅரங்கத்திற்கு ராஜேந்தர் வருகை புது பலத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில் திடீரென திமுக அணியிலிருந்து விலகுவதாக ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கு திமுக அணியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே திமுக கூட்டணியிலிருந்து லட்சிய திமுக விலகுகிறது.
இனிமேல் லட்சிய திமுக தனித்து செயல்படும். யாருடனும் கூட்டு சேர மாட்டோம். யாருக்கும் பல்லக்கு தூக்கத் தயாராக இல்லை. யாரையும் தட்டிக் கேட்க தயங்க மாட்டேன்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் சொல்ல முடியாத அளவுக்கு குழப்பம் நிலவுகிறது. கூட்டணிச் சிக்கலை சரி செய்வதிலும், சந்திப்பதிலும் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சர்க்கஸ் வித்தை போல நடந்து கொண்டிருக்கிறது.
கட்சி பொதுக்குழுவைக் கூட்டியுள்ளோம். அப்போது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications