விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு உலகளாவிய அளவில் ஆயுதங்களை கொள்முதல் செய்பவரும், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும் முக்கியத் தலைவருமான குமரன் பத்மநாதன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டார்.
கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்மநாதன். கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் வெடித்ததும் குமரன் மலேசியாவுக்கு தப்பினார். அங்கு 1987ம் ஆண்டு கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
பின்னர் 1995ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்காக 6 கப்பல்களை வாங்கி அனுப்பினார். குமரனின் முக்கிய வேலையே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல்வேறு இடங்களிலிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்புவதுதான்.
குமரன் தவிர அய்யண்ணா என்பவரும் ஆயுதக் கொள்முதலில் ஈடுபட்டுள்ளார். இந்த இருவரும் சேர்ந்து ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் டாலர் வரை புலிகள் அமைப்புக்காக நிதி திரட்டிக் கொடுத்து வந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறார் குமரன். இவருக்கு தாய்லாந்து குடியுரிமை உள்ளது.
குமரனுக்குத் தேவையான பணத்தை வசூலித்துக் கொடுப்பது அய்யண்ணா பிரிவின் பணியாகும். மேலும், உளவு பார்க்கும் வேலையிலும் அய்யண்ணா பிரிவு ஈடுபட்டு வருகிறது.
குமரன் பத்மநாதனுக்கு லண்டன், பிராங்க்பர்ட், ஏதென்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன.
யாங்கூன், சிங்கப்பூர் மற்றும் ஜோஹன்னஸ்பர்க் ஆகிய இடங்களில் இருந்தபடி செயல்பட்டு வந்தார் குமரன்.
இன்டர்போல் போலீஸாரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் தலைவர்கள் பட்டியலில் குமரனும் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் தாய்லாந்தில் 3 விடுதலைப் புலிகளை இன்டர்போல் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குமரன் திங்கள்கிழமை இரவு இன்டர்போல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
குமரன் கைது செய்யப்பட்டிருப்பது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குமரனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு தாய்லாந்து இன்டர்போலை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேசமயம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குமரனுக்கும் தொடர்புடையதாக கருதப்படுவதால் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications